வியாழன், 3 ஜூலை, 2014

இன்றைய திருக்குறள்

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.




இன்றைய திருக்குறள்
தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

சினம் என்றால் கோபம். கோபத்தில் ஒருவனுக்கு உடல் நிலையே மாறுகிறது. இரத்த அழுத்தம் ஏறும். மூச்சு வாங்கும். மூளை சரியாகச் சிந்திக்காது .. எத்தனை எத்தனையோ. சினம் கொள்ள மூல காரணம் – எதிர்பார்த்த விஷயம் நடக்காதது; கிடைக்காதது; எதிரில் இருப்பவர் தான் சொன்ன பேச்சைக் கேட்கவேண்டும் என்று நினைக்கையிலேயே அவர் மறுத்தால் .. கோபம், உக்கிரம். ஆக, ஆராய்ந்து பார்த்தால் கோபத்திற்கு அடிப்படை இயலாமை. தன்னால் இயலாத விஷயத்தில்தான் கோபம் வரும். சொன்னேன் கேட்கவில்லை, முயன்றேன் நடக்கவில்லை … கோபம்! உன்னை என்ன செய்கிறேன் பார் என்று தன் புஜபல, தவபல வலிமையைப் பிரயோகிக்கிற வேகம். 

கோபம் கொண்டவனுக்கும் கேடு விளைவிக்கும்; அதில் அகப்பட்டவனுக்கும் கேடு விளைவிக்கும். அதனால் தான், ‘தன்னைத் தான் காக்கின் சினம் காக்க’ – உன்னை நீயே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் சினத்தை நிறுத்திக்கொள்! ‘காக்க’ என்பதற்கு ‘அணைபோட்டு நிறுத்து, வெளியே விடாமல் வைத்துக் கொள்’ என்று அர்த்தம். அப்படி காக்க மறுத்தால், அந்தக் கோபம் உன்னையே கொன்று விடும் – பொருள்: நீ நீயாக இருக்க மாட்டாய். ‘நான்’ என்ற உன் சுய அடையாளம் மடிந்து, வேறு ஆளாகவே மாறிவிடுவாய்.
இன்னொரு வகையில் பார்த்தால் “கோபத்தை உடனே காட்டாமல், தாமதம் செய்!” என்றும் பொருள் வருகிறது. ‘காக்க’ – hold it, don’t show now. விஷயங்களைக் கொஞ்சம் ஆறப் போட்டுப் பார்த்தால் வேகம் தணிந்து விடும். முக்கியமாக கோபத்திற்கு அந்தக் குணம் உண்டு. ஒரு மனிதனால் சதா நேரமும் கோபத்திலேயே இருக்க முடியாது. ஏதாவது ஒரு சொல், ஒரு செயல், ஒரு நிகழ்வு அவனைத் தன்னிலைக்குக் கொண்டுவந்து கோபத்தைப் போக்கி விடும். சில சமயங்களில், காரணத்தோடு வேண்டும் என்றே கொள்ளும் கோபமும் உண்டு; ஆனால் கோபம் என்பது விளையாட்டாக எடுத்தால் கூட, கொண்டவனை அப்படியே ஆட்கொண்டு கொன்று வேறு ஆளாக்கிவிடும்.

பக்தன், குழந்தை பிரகலாதன் சொல் காப்பதற்காகத் தூணில் இருந்து கோபத்தோடு வந்தது நரசிங்கம். அது இரண்ய அரக்கனைக் கொல்ல வேறு வழியில்லாமல் வேண்டுமென்றே கொண்ட கோலம். சாந்த வடிவில் நின்று கோபம் காட்டுவது கடினம். சின்னப் பிள்ளையாக வந்து மஹாபலியிடம் மூன்றடி கேட்டபோது சாந்தம். மூன்றி அளக்கக் கிளம்பியபோது, விஸ்வரூபமாய், பலத்தைக் காட்டி மஹாபலியின் தலையைப் பூமியில் புதைத்தது கோபம். அந்தக் கோபத்தில் உக்கிரமில்லை. உடனே தணிந்தது.

ஆனால் நரசிம்மம் மிருக ரூபமும் கொண்டதால் தானோ என்னவோ இரணிய அரக்கனைக் கொன்றும் தணியவில்லை கோபம். யாரைக் காக்கக் கோபம் கொண்டாரோ அந்த பிரகலாதனைக் காட்டி, மனதுக்கு இனிய மனைவி, இலட்சுமியைக் காட்டி, மெதுவாகக் கோபம் தணிக்க வேண்டியிருந்தது.

கோபம் பல நேரங்களில் காரியத்தைக் கெடுத்து விடும். அதனால்தான் வியாபாரக் கல்விக் கூடங்களில் (Business schools) கோபம் வரும் போது, 10 அல்லது 20தில் இருந்து ஒன்று ஒன்றாகக் கீழ் நோக்கி எண்ணிக் கொண்டு வரக் கற்றுக் கொடுக்கிறார்கள். பத்து, இருபது நொடி .. இந்தச் சிறு காலம் வரை மட்டும் கோபத்தைக் கட்டுப் படுத்திவிட்டால், புத்தி தணிந்து சுய சிந்தனை மீண்டு வந்து நீ நீயாக இருப்பாய். 

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக