சனி, 19 நவம்பர், 2022

தமிழ்நாடு மாநிலம் - பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம்

தமிழ்நாடு மாநிலம் - பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம்

குறிப்பு: இந்தக் கட்டுரை பெண்ணியம் பேசுகிறது. அரசியல் தென்பட்டால் அது பெண்ணியம் தொடர்பானது மட்டுமே.

விலையில்லா வேலை, விலையில்லா சேவை

சுமை தூக்கும் தொழிலாளி தொடங்கி தரகு வரை கூலியாக அல்லது கட்டணமாக அல்லது சம்பளம் என்று பல பெயர்களில் வேலைகளுக்குப் பணம் கைமாறுகிறது.

ஆனால் எவ்வித பணமும் கொடுக்காமல் பிறரிடம் இருந்து வேலைகளை இந்த உலகம் அனுபவிப்பது இரண்டு வகையில்தான்.

1.   1. கொத்தடிமைகள் -இன்னும் உலகில் இது ஏதோ உருவத்தில் இருக்கத்தான் செய்கிறது.

2.  2. பெண்கள் - தாய், மனைவி, மகள், உடன்பிறந்தவள் என்ற பெயர்களில் எங்கேயும் எப்போதும் பெண்கள் சம்பளம் இல்லாத வேலையாட்களாக இருந்து வருகிறார்கள். பணம் கொடுக்காவிட்டால் கூடப் பரவாயில்லை, சிறிதும் நன்றி, அங்கீகாரம் இல்லாத வேலை பெண்கள் செய்கிற வீட்டு வேலை.

சமூகம் பெண்கள் மீது திணிக்கின்ற சுமைகள் அதிகம். பாரம்பரியம், கலாச்சாரம், பாதுகாப்பு என்பது போன்ற வடிவங்களில் பெண்களின் நடமாட்டம் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் அனுமதிக்கப்படுகிறது. ஆகவேதான் வீட்டு வேலைகள் பெண்களிடம் கட்டாயமாக சுமத்தப்படுகின்றன.

வெளியில் பணம் சம்பாதிக்கும் ஆண், அது சமையல், தையல் வேலை என்றாலும்கூட வீட்டிற்குள் அந்த வேலையைச் செய்தால் மதிப்புக் குறைந்துவிடும் என்று செய்ய மாட்டார். அப்படி வீட்டு வேலையைச் செய்யத் துணியும் ஆண்கள் இன்னுமே இழிவாகவே பார்க்கப்படுகிறார்கள். ஆனால் இன்றளவும் - மதிப்பைக் குறைக்கும், உழைப்பைச் சுரண்டும், நன்றிகெட்ட - வீட்டு வேலை பெண்களுக்கு மட்டும் ஏக போகக் கடமை.

பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளின் மதிப்பை அளப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தொடங்கி யாருக்கும் இன்றளவும் இயலவில்லை. சரி, பணம் இல்லை என்றாலும் இந்த வேலைகளுக்கு முறையான நன்றியாவது கிடைக்கிறதா? வீட்டு வேலை என்பது முறையான அங்கீகாரம் கிடைக்காத பணி, சேவை! உண்மையிலேயே விலையில்லா வேலை, விலையில்லா சேவை இதுதான்.

சுருக்கமாகச் சொன்னால் வங்கியில் சென்று கடன் கேட்டால் இதை ஒரு வேலை என்று மதித்துக் கடன் கொடுக்க மாட்டார்கள்!

யாரும் பறிக்க முடியாத பணம்

பெண்களுக்கென்று சலுகைகள் வழங்குவதை நீர்த்துப் போகச் செய்கின்றவர்களும், எதிர்ப்பவர்களும், தவறாகப் பயன்படுத்துபவர்களும்தான் அதிகம் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, மாணவிகளுக்கு மடிக்கணினி, மிதி வண்டி கொடுக்கப்படும்போது அவை வீடு வந்து சேரும் முன்பே அடகுக் கடைக்குப் போன இடங்கள் ஏராளம்.

ஆனால் மாணவர்கள் கையில் உள்ள இலவசப் பேருந்துப் பயண அட்டையை வேறு யாரும் தவறாகப் பயன்படுத்த முடியாது.

அது போல யாரும் பறிக்க முடியாத, ஏமாற்றி அனுபவிக்க வாய்ப்புகள் மிகக் குறைவான ஒரு சலுகைதான் தமிழகத்தில் பெண்களுக்கு பேருந்துப் பயணம் இலவசம் என்பது.

இது யாரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாதபடி நமக்குத் தரப்பட்டிருக்கும் பணம். வீட்டு வேலைக்குக் கிடைத்துள்ள குட்டியூண்டு சம்பளம்.

இலவசம் என்றால் கூசாதா? இலவசம் அவமானம் இல்லையா?

அவசரத்தில் இலவச வண்டி என்று தெரியாமல் ஏறிவிட்டு நடத்துநர் பயணச்சீட்டு கொடுத்த போது புரிந்ததும் முதலில் எனக்கு ஒருவிதக் கூச்சம், நமக்குத்தான் கையில் பணம் இருக்கிறதே, சம்பாதிக்கிறோமே, சலுகை என்றால் ஏழைகளுக்கு, இயலாதவர்களுக்குத்தானே. எனக்கு எதற்கு என்றெல்லாம் என்னுள் போராட்டம்.

வீட்டில் வந்து ஆற அமர சிந்தித்த போதுதான் புரிந்தது.

நான் எல்லாம் பல சகோதரிகள் அளவு வீட்டில் அதிகம் வேலை செய்கிற ஆள் இல்லை, ஆனாலும் சில கடமைகளைத் தவிர்க்க முடியாமல் நானாக ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறேன். ஆணாக இருந்தால் இப்படி இருந்திருக்க மாட்டேன். நிச்சயமாக! எனக்கு உள்ளும் பிறவி தொடங்கி இந்த சமுதாயம் எனது இரத்தத்தில் ஏற்றிவைத்துள்ள ‘பெண்மை’ எங்கோ இருந்துகொண்டு இந்த வலையில் என்னைப் பிணைத்துவிடுகிறது. இந்த வேலைகள் செய்யும் போது எனக்குத் தெளிவாகவே உணர முடிகிறது, மதிப்பு குறைத்தே நடத்தப்படுகிறேன். என் கருத்துக்களுக்கு, விருப்பங்களுக்கு மதிப்பு தரப்படுவதில்லை.

இந்த நன்றி கெட்ட வீட்டு வேலையில் செலவழிக்கும் என் நேரத்தையும் உழைப்பையும் அலுவலக வேலை அல்லது வியாபாரத்தில் பாயவிட்டால், ஆண்கள் போலப் பணமாகச் சம்பாதித்துக்கொண்டு இருக்கலாமே. அப்போது வீட்டில் பாத்திரம் கழுவுவது, சமையல் உள்ளிட்ட வேலைகளை சம்பளப் பணம் கொடுத்து வேறு சகோதரிக்கு இதை ஒரு வருமானம் தரும் வேலையாக ஆக்கி அந்த வேலைகளுக்கும் மதிப்பை ஏற்றலாமே!

அப்போதுதான் இத்தகைய ‘பெண்ணிய’ சிந்தனைகளை மீறிக் கடமை உணர்ச்சியில் செய்கின்ற வேலைக்குச் சமுதாயம் தருகின்ற அங்கீகாரமாகவே இந்தப் பேருந்துப் பயணத்தை என்னால் உணர முடிந்தது. காலையில் பாத்திரம் தேய்த்துவிட்டு, வீட்டைப் பெருக்கி விட்டு, உடைந்த பல்பை மாற்றிவிட்டு வந்த வேலைக்கு தமிழ்நாடு அரசின் இலவசப் பேருந்து சேவை யாரும் பறிக்க இயலாத ‘எனக்கே எனக்கான உரிமை’ ஊதியம் என்பது புரிந்தது.

·         உதிரிப் பூ மூட்டையைச் சுமந்து கொண்டு மதுரை பூ சந்தையில் இருந்து அதிகம் வேண்டாம், கோரிப்பாளையம் வரை நடந்து சென்று பாருங்கள்,

·         அதிகம் வேண்டாம், ஒரே ஒரு தார் வாழைப் பழங்களைத் தலைச்சுமையாகக் கூடையில் சுமந்து கொண்டு இரண்டே இரண்டு தெரு சுற்றி விற்றுப் பாருங்கள்,

·         அழுக்குத்துணி மூட்டையைச் சுமந்து கொண்டு துவைப்பதற்காகத் தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரக் கணக்கில் பேருந்து வசதி இருந்தால் கூட கால்நடையாகவே ஆற்றுக்கு நடந்து திரும்பும் நமது கிராமத்துத் தாய்மார்கள் வேலையைச் செய்து பாருங்கள்,

·         பருப்பு ஆலையில் 60 கிலோ மூட்டையை ஆண்களுக்கு இணையாகச் சுமந்து பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள்,

அப்போது புரியும் - 10 ரூபாய் சேமிப்பதற்காக எத்தனை சுமையை நம் பெண்கள் சுமக்கத் துணிகிறார்கள் என்று.

இன்று இலவச பேருந்துப் பயணம் இவர்களில் பெரும்பான்மையானோருக்குப் பெரிய வரம்!

நன்றி சொல்லலாமா?

பெண்கள் சேமிக்கும் பணம் குடும்பத்திற்கே செலவழிகிறது. வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி குடும்பத்தினருக்குச் சோறு போடத்தான் சுமை தூக்குகிறார்கள் பெண்கள். நகை என்று அவர்கள் கையில் உள்ள சொத்துதான் எப்போதும் குடும்பத்தின் தைரியமாக அதேசமயம் குறியாகவும் இருக்கிறது. கையில் ஏதும் இல்லாமல் அநாதரவாக வைத்திருந்தால்தான் பெண்களின் உழைப்பைச் சுரண்டலாம் என்று நன்றாகப் பழகிக் கொண்டிருக்கிறது உலகம்.

அத்துடன் பெண்களுக்குக் கொடுக்கப்படும் சலுகை மீண்டும் குடும்பத்திடம் சென்று சேருகிறது என்பதுதான் உண்மைகூட. இலவச பேருந்தில் சென்று அவர்கள் சேமிக்கின்ற 10 நிமிட நேரம், அதனால் தவிர்க்கப்படும் களைப்பு எல்லாமே நேரடியாகவோ மறைமுகமாகவோ குடும்பத்திற்குத்தான் போய்ச் சேருகிறது.

பெண்களுக்கு என்று இலவச பேருந்துப் பயணம் போன்ற, பிறரால் பறித்துக் கொள்ள இயலாத சலுகைகளைத் தர முன்வருபவர்கள் அதன் பின்னால் இருக்கும் காரணம் எதுவானாலும் சரி, அவர்களுக்கு நாம் நன்றிகூற வேண்டியவர்கள்தான். இது நிச்சயம் பெண்களுக்கான திட்டம். பெண் இனத்தின் நன்மையை நீண்ட கால நோக்கில் சிந்தித்துச் செய்த நன்மை. இந்த நன்மையைச் செய்த தலைவர்கள், அவர்களின் ஆலோசகர்கள், இலவசப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் உள்பட இத்திட்டத்தில் பங்களிக்கும் அனைவருக்கும் நன்றி!

ஒரு 10 தடவையாவது இலவசப் பயணம் செய்துள்ளேன். ஒரு முறை கூட ஓட்டுநர், நடத்துநர் யாரும் மதிப்புக் குறைவாகப் பேசவோ பார்க்கவோ, வெறுப்பு, ஏளனம் காட்டவோ செய்ததில்லை. அவர்களுக்கும் புரியும்தானே.

இலவசப் பேருந்துப் பயணம் செய்வோம் வாருங்கள்

இத்தகைய சலுகைகளில் பங்கெடுப்பதன் மூலம் அவற்றின் நியாயத்தினை நிலை நாட்டி, சகோதரிகளுக்கும் ஆதரவாக இருக்கலாம். ஏன் எனில், அதிகம் படித்த, வெள்ளைச் சட்டை வேலைகளில் நன்றாகச் சம்பாதிக்கும் பெண்கள் மீது பிற பெண்களுக்கு ஒரு கனவு, ஏக்கம், பிரமிப்பு, நன்மதிப்பு! எத்தனை திறமைகளை எத்தனை எத்தனை கனவுகளைச் சுமந்துகொண்டு கையில் பைசா இல்லாமல் சதா வீட்டிற்கென்று உழைத்துக் கொண்டே வாழ்ந்து ஏக்கங்களே வாழ்க்கையாக முடிந்து விடுகிறார்கள் பெரும்பான்மையான பெண்கள்!

ஆண் இல்லை என்றால் உலகமே இயங்காது. அந்தக் கையில் இருக்கும் பணப்பைதான் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. இன்று பணப்பை இல்லாமல் நாமும் பயணம் செய்யலாம். பெண்கள் செய்கிற வீட்டு வேலைகளுக்கு இனி வருங்காலத்தில் கிடைக்கவிருக்கின்ற பெரும் அங்கீகாரத்தின் முதல் படியாகவே இந்த இலவச பேருந்துப் பயணத்தைப் பார்க்கிறேன்.

பெண்களே இலவசப் பேருந்தில் பயணியுங்கள். கையில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும். இலவச பேருந்துப் பயணம் பெண்கள் வீடுகளில் இலவசமாகவே செய்துவரும் வேலைகளுக்கு அரிதாகக் கிடைத்திருக்கும், யாரும் பறிக்க இயலாத அங்கீகாரம்! அதைப் பயன்படுத்தி நமது சகோதரிகள் அனைவரும் பயன்படுத்த ஊக்கம் தாருங்கள்.

இது இலவசமில்லை. உலகம் முழுவதும் வீட்டுக்கு வீடு நாம் கொடுக்கும் விலை மதிக்க முடியாத பெரும் இலவசங்களுக்குக் கிடைத்துள்ள சிறு அங்கீகாரம் அவ்வளவே.

ஆகவே … ஒரு முறையாவது இலவச பேருந்தில் ஏறிப் பயணம் செய்வோம் வாருங்கள்! வாருங்கள் சகோதரிகளே வாருங்கள்!

செவ்வாய், 5 அக்டோபர், 2021

யாவரும் கேளிர்

 

நன்றி : ஓ ஹென்றி! கதைகளைச் சுருக்கமாக தமிழில்

திருடன் ஜன்னல் வழியே உள்ளே குதித்துவிட்டு, நிதானித்தான். ஏதும் செய்வதற்கு முன்னால் நல்ல திருடனுக்கு நிதானம் அவசியம்.

முன்வாசலின் நிலையைப் பார்த்தவுடனேயே வீட்டு அம்மாள் இந்த நிமிடம் எங்கோ கடலோர உணவகத்தில் தன் தனிமை பற்றி யாரிடமோ புலம்பிக்கொண்டிருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டான். மூன்றாம் மாடியின் முன்புற ஜன்னல்களில் தெரிந்த வெளிச்சம் பார்த்ததும், வீட்டின் தலைவர் வந்தாயிற்று, இன்னும் சற்று நேரத்தில் விளக்கை அணைத்து விடுவார் என்பதும் அவனுக்குத் தெரியும். ஏனென்றால் அது செப்டம்பர் மாதம். இந்த மாதத்தில் எங்கோ கூரைத் தோட்டத்தில் யாரோ அலுவலகப் பெண்ணுடன் செலவிடுவதை விடத் தன் மனைவி வரவிற்குக் காத்திருப்பது நல்ல ஆணுக்கு அடையாளம் என்பதை நல்ல கணவர்கள் அறிந்திருப்பார்கள்.

திருடன் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தான். வெளிச்சத்தில் அவன் உருவம் தெரிந்தது. மூன்றாவது வகைத் திருடன் அவன்.

இந்த மூன்றாம் வகையை இன்னும் யாரும் ஆமோதித்து ஏற்கவில்லை. முதல் இரண்டு வகை நமது காவலர்களுக்கு நன்றாகத் தெரியும். எளிமையான வேறுபாடுதான். சட்டைக் கழுத்துப் பட்டியைப் பார்த்தால் தெரிந்துவிடும்.

கழுத்துப்பட்டி அணியவில்லை என்றால் அவன் கீழ்த்தரமானவன், 1878-ல் கைதில் இருந்து தப்பிப்பதற்கு காவலரின் விலங்கினை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியவன். இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் நன்றாக அறிந்த இன்னொருவகை கழுத்துப் பட்டி அணிபவன். பகல் நேரம் ரொம்ப நல்லவனாக அப்பிராணியாக முறையாக உண்டு உடுத்தி இருந்துவிட்டு, இருட்டியதும் திருட்டுத் தொழிலில் இறங்கிவிடுவான். அவன் தாய் அந்த ஊரிலேயே மரியாதையாக வாழ்பவள். அவனைச் சிறைக்கு அழைத்துச் செல்லும்போது நகவெட்டியும், காவலர் காவியம் புத்தகமும் ஒரே நேரத்தில் கேட்பான். அவனுக்கு மாநிலத்திற்கு ஒரு மனைவியும், ஒன்றியப் பகுதிக்கு ஒரு துணைவியும் இருப்பார்கள். ஐந்து மருத்துவர்கள் கைவிட்ட பிறகு ஒரே புட்டி மருந்தில் குணமான கதையுடன் அவர்களின் புகைப்படங்கள் செய்தித்தாள்களில் அச்சேறும்.

நம் திருடன் நீல நிறச் சட்டை அணிந்திருந்தான். இவன் இரண்டாம் வகையும் இல்லை, முதல்வகையும் இல்லை. வாயில் சூயிங்கம் மென்றுகொண்டு .38 துப்பாக்கி பையில் வைத்திருந்தான்.

வீட்டின் இருக்கைகள் கோடைக்கால தூசிக்குப் பயந்து போர்வை போர்த்தியிருந்தன. வெள்ளிப் பாத்திரங்கள் எங்கோ பெட்டகத்தில் பாதுகாப்பாக இருந்தன. ஒன்றும் பெரிதாக அவனும் எதிர்பார்க்கவில்லை. வீட்டின் தலைவர் தனிமையைப் போக்கிவிட்டு அசந்து தூங்குகிற அந்த அறைதான் அவனுக்குத் தேவை. கொஞ்சம் பணம், கைக்கடிகாரம், தங்கப் பேனா, இப்படி தொழிலில் சேர்த்த சிறுபரிசுகள் அவனுக்குப் போதும். திறந்திருந்த ஜன்னலைப் பார்த்ததும் நுழைந்துவிட்டான், அவ்வளவுதான்.

வெளிச்சம் வந்த அறைக்கதவை மெதுவாகத் திறந்தான். படுக்கையில் ஆள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். கண்ணாடி மேஜையில் கசங்கிய பணம் கொஞ்சம், பாதி எரிந்த சிகரெட், காலியில் குடிக்க உற்சாக பானம் என்று கலவையாக பொருட்கள்.

மேஜையை நோக்கி மூன்று அடி எடுத்து வைத்தான். படுக்கையில் இருந்த நபர் சத்தத்துடன் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார். வலது கை தலையணைக்கு அடியில் நுழைந்து அங்கேயே நின்றது.

‘அசையவேண்டாம்’ திருடன் பேச்சுக் கொடுத்தான். மூன்றாம் வகைத் திருடர்கள் இரகசியம் பேச மாட்டார்கள். திருடனின் கைத் துப்பாக்கி முனையைப் பார்த்தபடி அசையாமல் இருந்தான் படுக்கைப் பேர்வழி.

‘ம் .. ரெண்டு கையையும் தூக்குங்க’ திருடன் ஆணையிட்டான்.

கொஞ்சம் வெளுத்த செம்பட்டைத் தாடியுடன் செல்வச் செழிப்பு அந்த நபரிடம் துலங்கியது. நன்றாக எழுந்து உட்கார்ந்து வலது கையைத் தலைக்குமேல் தூக்கினார்.

‘இன்னொரு கையும் ..’ திருடன் மிரட்டினான். ‘இடது கையால் கூட சுடுற ஆள்தான் நீ. ஒன்னு ரெண்டு எண்ணத் தெரியும்ல. ம் சீக்கிரம் ..’

‘அந்தக் கையத் தூக்க முடியல’

‘என்னா கத?’

‘தோள் பட்டையில முடக்கு வாதம்.’ முகம் சுளித்தார்.

‘வீக்கமா?’

‘இருந்தது. இப்ப போயிருச்சி’

மறைந்த கையை நோக்கித் துப்பாக்கியைப் பிடித்தவாறு திருடன் சில வினாடி நின்றான். மேஜையில் இருந்த மருந்துப் புட்டிமீது பாய்ந்த கண் கொஞ்சம் சங்கடத்துடன் மனிதர் மீது திரும்பியது. அவனும் இப்போது முகம் சுளித்தான்.

‘என்ன பார்க்கிற, வேண்டியத எடுத்துட்டுக் கிளம்பு. தேடு, கிடைக்கும். ஏதோ கொஞ்சம் இருக்கு.’

திருடன் முகத்தில் புன்னகை. ‘மன்னிக்கனும். எனக்கும் இதே பிரச்சினைதான். நானும் முடக்குவாதமும் பழைய நண்பர்கள். வேறு யாராவதா இருந்தா நீ இடது கையைத் தூக்கலைன்னதும் சுட்ருப்பான்.’

‘உனக்கு எத்தன நாளா இந்தப் பிரச்சினை?’ வீட்டு ஆள் விசாரித்தார்.

‘நாலு வருடம்! அது மட்டும் இல்ல. ஒருக்கா வந்தா இது வாழ்நாள் பூரா ஒட்டிக்கும் – இது என் அனுபவம்’

‘கட்டுவீரியன் தைலம் போட்டுப் பாத்தியாப்பா?’

‘ வண்டி வண்டியா ஆச்சு…நான் குடிச்ச எண்ணெய்க்கு அந்த பாம்புகள நீட்டி வரிசையா நிறுத்தினா இங்கருந்து நிலாவரைக்கும் ரோடு போடலாம்’

‘சிலர் மாத்திரைகூட பயன்படுத்தறாங்களே ..?’

‘என்னாத்த … அஞ்சு மாசம் தின்னேன் …ஒன்னும் சரிப்படல .. வைத்தியர் தைலம் ஒரு வருடம் கொஞ்சம் சரிப்பட்டது … அதுவும் சரிப்படல …’

‘காலைலயா இல்ல சாயங்காலமா? எப்ப அழுத்தும்?’

‘ராத்திரி, எனக்கு வேலை நேரம் எப்பவோ அப்ப … எப்பவாவது முடக்கத்தான் தைலம் போட்ருக்கீங்களா?’ திருடன் விசாரித்தான்.

‘ம்ஹூம் …உனக்கு அப்பப்ப வருமா இல்ல விடாம மடக்குமா?’

திருடன் படுக்கை நுனியில் அமர்ந்து துப்பாக்கியை முழங்கால் மடிப்பில் வைத்துக் கொண்டான்.

‘தடக்குனு தாக்கும். ‘ திருடன் சொன்னான். ‘எதிர்பாராத நேரத்துல சுருக்குனு அடிக்கும். அதனாலயே மாடி வேலையை விட்டுட்டேன். பாதி ஏறுற போதே உயிர வாங்கிரும். சொல்றனே … இந்த டாக்டர்கள் பைசாவுக்கு ஆகமாட்டார்கள். ஒருத்தருக்கும் இதுபத்தித் தெரியது.’

‘எனக்கும் அப்படித்தான். லட்ச ரூபாய் செலவழிச்சு ஒரு மண்ணும் ஆகல. வலி குறையக் காணோம். உனக்கு வீக்கம் வருமா?’

‘ காலைல … மழை பேயப் போகும் போது ..கடவுளே ..’

‘எனக்கும்தான். மதுரைல மேகம் வந்தா மானாமதுரைல மழைபேய்ஞ்ச கததான். இடது கைல ஈரம் வழிய ஆரம்பிச்சுரும்.’

‘சனியன் .. விடாம் ஒழுகும்.’

‘சரியாச் சொன்ன!’

திருடன் துப்பாக்கியைச் சற்று சங்கடத்துடன் பார்த்துவிட்டுப் பையில் சொருகிக் கொண்டான்.

‘தாத்தா! நீலகிரித் தைலம் போட்டுப் பாத்தியா?’

‘போதும் போதும்… சும்மா வெண்ணெய்யத் தடவினாக் கூடப் பரவாயில்லை.. சனியன்’ கோபமானார்.

‘சரிதான். பூனைக் கால் நகம் விழுந்த புண்ணுக்குக் கூட ஆகாது. நாம் ரெண்டு பேருமே இதுக்கு எதிரிதான். வலியைக் குறைக்க ஒரே வழிதான்… எதையும் மறக்க வைக்கிற குடிதான். இன்னைக்கி என் வேலை கெட்டது. டிரஸ் மாத்திட்டு வா போவோம். எங்கயாவது போய்க் குடித்து வலியை மறப்போம். மன்னிச்சுக்கோப்பா .. நான் பாட்டுக்குப் பேசுறேன். தா, மறுபடி வருது பாரு. யப்பா..’ திருடன் வலியில் முனகிணான்.

‘ஒரு வாரமா … உடுப்பு போடக்கூட முடியலப்பா. தாமஸ் வேற பக்கத்துல காவல் இருக்கு …’

‘போதும் எழுந்திருப்பா … உடுப்புக்கு நான் உதவுறேன்’

திடீரென்று வீட்டு ஆளுக்கு பழக்க வழக்கம் நினைவுக்கு வந்தது. தாடியை நீவிக் கொண்டார்.

‘இது வழக்கம் இல்லையே ..’

‘இந்தா சட்ட. மாட்டிட்டுக் கிளம்பு..’ திருடன் ஊக்கினான். ‘கிளம்புப்பா. என் நண்பன் ஒருத்தன் ஏதோ தைலம் போட்டு ரெண்டே வாரத்துல எல்லாம் சரியாயிருச்சின்னு சொன்னான். அங்க போயிப் பாப்பம்’

கதவை நெருங்கும்போது வீட்டு ஆள் மீண்டும் உள்ளே திரும்பினார்.

‘பணத்தை மறந்துட்டனே. நேத்து ராத்திரி மேஜைல வச்ச ஞாபகம்’

திருடன் அவர் வலது தோளைத் தொட்டுத் திருப்பினான்.

‘வாப்பா போலாம். கூப்டது நான். அதோட நிறுத்திக்குவம். என்ட்ட பணம் இருக்கு. எப்பவாது புத்தூர் தைலம் போட்ருக்கியா நீ’

------------

வியாழன், 12 டிசம்பர், 2019

திருக்குறள் - ஊழ் (செல்வம்)


ஊழ் – (செல்வம்)

371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி
செல்வம் பெருகும் நேரத்தில் எதற்கும் அசையாமல் இருப்பார்கள், ஆனால் செல்வம் கையை விட்டுப் போகும் நேரத்தில் தானாகவே மடிந்து (தலை கவிழ்ந்து, உடல் மடிந்து, கூனிக் குறுகிப் பிறருக்குக் கட்டுப்பட்டு) விடுவார்கள்.

372. பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை
ஏழையாக இருந்தவரை அறிவிலி என்று உலகினால் பழிக்கப்பட்ட அதே மனிதன், செல்வம் வந்தவுடன் அறிவாளி (அறிவகற்றும்) என்று ஆகிவிடுவான்.

373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்
செல்வம் சேர்க்கும் செயலைப் பொருத்தவரை, ஒருவன் எத்தனை நுணுக்கமான கருத்துகள் கொண்ட நூல்களைக் கற்றிருந்தாலும்கூட, அவனிடம் இயல்பாக இருக்கும் அறிவு மட்டுமே கைகொடுக்கும். [கல்வியினால் அறிவை விரித்துக் கொள்ளலாம், ஆனால் செல்வம் சேர்க்கும்போது எல்லோருக்கும் பாகுபாடு இன்றி அவர்தம் இயல்பான அறிவு மட்டுமே பயன்படும்]

374. இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு
செல்வம் பெறுவது, தெளிந்த அறிவைப் பெறுவது என்ற இரண்டும் இயற்கையாகவே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வெவ்வேறு உலகங்கள். அதாவது செல்வம் இருந்தால் அறிவு கிடைக்கும் என்றோ, அறிவு இருந்தால் செல்வம் ஈட்டலாம் என்றோ ஒன்றை ஒன்று சார்ந்து சொல்ல முடியாது – அது வேறே, இது வேறே. They don’t depend on each other. One does not imply the other.

375. நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு
செல்வம் ஈட்டும் போது, பொதுவாக நல்லது என்று பின்பற்றுகிற எல்லாம் கூடத் தீயதாகவும், தீயது எல்லாம் கூட நல்லது என்றும் ஆகக்கூடும்.

376. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

செல்வமானது ஒரு சமயம் பிடித்து இழுத்தாலும் வராது, மறு சமயம் அள்ளிக் கொட்டித் தள்ளிவிட்டாலும் விலகிப் போகாது, கூடவே ஒட்டிக்கொள்ளும்.

377. வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
இதெல்லாம் யாரோ போடுகின்ற கணக்கு, அதைமீறி நாம் கோடிப் பணம் தேடி வைத்தாலும் அனுபவிக்க முடியாது.

378. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்
செல்வம் ஈட்டத் துப்பில்லாதவர்கள், யாராவது வந்து கையில் இடுகின்ற உணவு கிடைத்தால் (பிச்சை) போதுமென்று துறவியாகிவிடுவார்கள். [சோறு கண்ட இடம் சொர்க்கம்]

379. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
தான் நன்றாக இருக்கும் போது(செல்வந்தராக) பார்க்கும் எல்லாமே நல்லதாகவே தெரியும், ஆனால் தனக்கு முடியாதபோது(ஏழையானதும்) உலகமே துன்பமயமாகத் தெரியும் என்பது உலக வழக்கம்.

380. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
செல்வத்தைவிட வலிமையுள்ள பொருள் என்று வேறு எதைச் சொல்ல முடியும்? சுற்றி எத்தனை போட்டி இருந்தாலும் செல்வமே அத்தனையையும் முந்திக்கொண்டு முதலிடம் பிடிக்கும்.

திங்கள், 11 நவம்பர், 2019

குறள் - மருந்து


குறிப்பு:
குறைந்த அளவு அதிகாரங்கள் மட்டுமே பத்துக் குறளும் ஒரு கோர்வையான கருப்பொருளாக இருக்கும். அதில் இந்த அதிகாரம் 100% கோர்வையாக ஒற்றைப் பொருளைச் சொல்வது.

1. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

            (மருத்துவ) நூல் பயின்றோர் முக்கியம் என்று கருதிய வளி (வாயு?) முதலிய மூன்றில் ஏதேனும் அளவு கூடினாலும் குறைந்தாலும் நோய் ஏற்படும். குறிப்பு: இதில் எந்த மூன்று என்பது சொல்லப்படவில்லை. உரையாசிரியர்கள் வெவ்வேறு பொருள் கொள்கிறார்கள்.

The learned (medical practioners) perceive that, all body disorders are due to increase or decrease in any one of the said three vitals including Gas(in a body).
2. மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

            ஏற்கனவே அருந்திய உணவானது, செரித்து வெளியேறிவிட்டது (அற்றது) என்பதன் அறிகுறிகளைத் தெரிந்து - எ.கா: பசி எடுப்பது, செய்யப்போகின்ற வேலைக்கு இந்த சக்தி போதாது என்று புரிவது, இப்படியாக - அதன்பிறகு உண்டால், உடலுக்கு மருந்து என்பது தேவைப்படாது.

Body needs no medicine, for thy eats only upon digesting previous meal.

3. அற்றால் அளவறிந்து உண்க: அஃதுடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.

            இப்படிச் செரித்து விட்டால், அதுவே தேவையான அளவு உணவு என்பதை அறிந்து அந்த அளவையே தொடர்ந்து உண்ணுங்கள்; அதுவே உடம்பு வைத்திருப்பவர்கள் நீண்ட காலம் அதைப் பேணிப் பாதுகாக்ப்பதற்கான வழியாகும்.
Know that such digestible food is your limit, and that is way to live longer.

4. அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து.

            இப்படியாக செரிமானத்தின் அடிப்படையில் அறிந்து தெளிந்து, உணவு, அதன் காலம், அளவு இவற்றை நிர்ணயம் செய்து கொண்டு அதை மாறாமல் கடைப்பிடித்து வந்தால் நன்றாகப் பசித்து, உணவை அனுபவித்து(துய்த்து) உண்ண முடியும்.
Know your digestive limit, type of food, timing, and quantity and make it regular, you can enjoy food with good appetite.

5. மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

            இப்படியாக மாறுபாடு இல்லாத உணவை இடையிடையே உணவு மறுத்து (உண்ணா நோன்பிருந்து) வந்தால். உயிருக்கு எவ்விதத் தீங்கும் நேராது.
If such food habit is followed with fasting now and then, there will be no harm to life.

6. இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்.

            தன் உடம்பிற்கு ஏற்ற இந்தக் 'இழிவு' என்னும் குறைந்த அளவினை (Minimal)அறிந்து உண்பானிடம் இன்பம் தங்கும், அதைப் போலவே 'கழிவு' என்னும் அதிக பட்ச அளவு (Maximum) உணவை உண்பானிடம் நோய் சென்று தங்கிவிடும்.
One who knows the minimal food for his body and following it will enjoy life ; likewise the one who take unlimited food will fall into perpetual illness..

7. தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்
நோயளவு இன்றிப் படும்.

            இப்படித் தன் வயிற்றினால் செரிக்கப்படும் அளவைத் (தீயளவு) தெரிந்து கொள்ளாமல் பேரதிகமாக உண்டால் அளவற்ற நோய் பீடிக்கும்.
If you eat more and more without knowing the digestive power of your body, you will experience all kind of bodily disorders.

8. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

            என்னதான் இந்த நோய், இது வந்ததற்கான ஆதி காரணம் எண்ண என்பதை ஆராய்ந்து, பிறகு அதைத் தணிக்கும் வழியைத் திட்டமிட்டுப் பிழையில்லாமல் பின்பற்றினால் நோய் தீரும்.
Find out the disorder, its route cause and then find the way to remedy it.
9. உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

            வயது முதலான நோயுற்றவனது அளவுகளையும், தாக்கம் முதலிய நோயின் அளவுகளையும், நோய் பீடித்த கால அளவையும் கருத்தில் கொண்டு மருத்துவம் பார்க்க வேண்டும்.
The Learnt consider the nature of patient, disorder and its duration before acting upon it.
10. உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.

            நோயுற்றவன், நோயைத் தீர்க்கும் மருத்துவன், மருந்து மற்றும் அந்த மருந்தினைக் கொடுத்து நோயாளியைக் கவனித்துப் பேணுபவர் என்ற நான்கும் சேர்ந்ததுதான் மருந்து.
The patient, the physician, the medicine and the nurse are the four parts of medicine.

திங்கள், 27 நவம்பர், 2017

புதிய பாடத்திட்ட வரைவு - தமிழகம்


தமிழக புதிய பாடத்திட்ட வரைவுகள் கிடைக்குமிடம்:
http://tnscert.org/webapp2/tn17syllabus.aspx

தயவுசெய்து கட்டாயம் பாருங்கள். Tamil.pdf மட்டுமாவது பார்த்து உங்கள் பின்னூட்டத்தை அரசாங்கத்திடம் பதிவு செய்யுங்கள். நம் மாணவர்களின், தேசத்தின் எதிர்காலம்.

ஞாயிறு, 18 ஜூன், 2017

அறிவியல் – என்ன நடக்குது இங்க?



ரொம்ப சீக்கிரமே, அடுத்த வருடமே, 2018-லேயே …. சைனா நிலவில் பெரிய சாதனை நிகழ்த்தப் போவதாக அறிவிப்பு. அதாவது 18செ.மீ X 16செ.மீ அளவுள்ள ஒரு உலோக உருளை போன்ற பெட்டிக்கு உள்ளே ஒரு சின்ன உயிர் உலகத்தையே இட்டு, உருளைக்கிழங்கு விதையைப் போட்டு, அந்தப் பெட்டியை நிலாவுக்கு அனுப்பி, பெட்டியில் உள்ள உருளைக்கிழங்கு செடியாக வளருமா, அத்துடன் இருக்கும் பூச்சிமுட்டைகளும் உயிர்பெறுமா என்று நிஜமான சோதனை நடத்திப் பார்க்கப்போகிறார்கள். இது வெற்றி பெற்றால் பெரிய அளவில் இப்படிப் பெட்டிகள் செய்து, நேரே செவ்வாய்க்கிரகத்தில் மனிதனைக் கொண்டு இறக்கிக் குடியேறுவதற்கான முதல் படி இது. மற்ற நாடுகள் செவ்வாய்க்கும் சூரியனுக்கும் வண்டி விட்டு இடம் தேடிப் போய்ச்சேர்ந்த அலுப்பைப் போக்க (இன்னும் அரை நூற்றாண்டு?) அங்கே சைனா டீக்கடை அவர்களை வரவேற்குமோ?