செவ்வாய், 24 ஜனவரி, 2017

நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - திரைப்படம்



நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - திரைப்படம்

ஶ்ரீ கிருஷ்ணா அறிமுக இயக்கம்.
தமிழில் நகைச்சுவை விதவிதமாகக் காட்டப்படும் கட்டத்தில் முக்கியமான குறிப்பிட்டுத் தெளிவாகச் சொல்ல முடியாத விஷயத்தை நகைச்சுவை கலந்து சொல்லும் படம். வலையில் தேடினால் இந்தப் படம் பற்றி அவ்வளவாக நல்ல விமரிசனம் கிடைக்கவில்லை. சொல்லப்போனால் மோசமான விமரிசனம் நிறையக் கிடைக்கிறது. ஆனால் இந்தப் படத்தை ஒரு மாதத்துக்கு முன்பு பார்த்தபோது நிறைய இடங்களில் மனம் நெருடியது. ஏனெனில் இதிலிருந்த சம்பவங்கள் பலவற்றுக்குப் பட்டும் படாமலுமான உதாரணங்களை நிஜவாழ்வில் நேரில் நிறையப் பார்த்துக் கேலி செய்திருக்கிறோம். சமூகத்தில் ஊடாடும் அறிகுறிகள் பலவற்றைக் கோர்த்து ஒரு கதையாக்கி ஏதோ சொல்ல முயலுகிற நேர்மையான படம். ஆனால் முக்கிய பாத்திரங்கள் தேர்வு சொதப்பல். மற்றபடி அந்தப் படத்தில் வேறு குறையில்லை. தாராளமாக முழுசும் பார்க்கலாம்.
மிக நேர்மையான ஊர். ஊர்த்தலைவர் பதவி என்பது ஊரை ஆளும் அதிகாரம், பணம் சம்பாதிக்கக் கிடைத்த அருமையான வழி என்று பெரிய காரும், கரை வேட்டியும், சூழ்ந்து நிற்கும் குண்டர்படையும் சூழத் திரியும் கெத்துக் காட்டாமல், மிகச் சாதாரணமாக மக்களோடு மக்களாகத் தானே சாக்கடை அடைப்பைச் சரிசெய்வது, தெருவிளக்கைச் சரிசெய்வது என்று சரியான மக்கள் தொண்டராக (நாம் கூட இந்த மாதிரி நிஜ மனிதர்கள் இருந்த கதையைத் தாத்தா பாட்டியிடம் கேள்விப்பட்டிருக்கிறோம்) இருக்கிற ஊர்த்தலைவர். மனம் திருந்திவாழும் திருடன். 10 பவுன் நகை தெருவில் கிடந்தாலும் தொலைத்தநபர் தவிர வேறெவரும் அதை ஏறிட்டும்பார்க்காத நேர்மை, கோவிலில் பணிசெய்து கொண்டு நேர்மையாய் வாழுகிற இளைஞர்கள் ... என்று ஆதர்ச, விருது வாங்கும் கிராமம். அங்கு போலீசுக்கு வேலை இல்லை என்பதால் அவர்களுக்கு மாற்றல் பயம் வந்ததும் அந்த ஊரிலேயே தங்கிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் அந்த ஊரின் ஒழுங்கு முறையில் அவரவருக்குத் தக்க நாலு போலீசும் கைவைக்கிறார்கள். முடிவில் ஊர்த்தலைவர் அரசியல்வாதியாகி ஊரை இரண்டு பண்ணுகிறார்; போலீசே திருடிய குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் திருடன் மீண்டும் திருடனாகிறான்; பொய்க்குற்றம் சாட்டப்படும் நேர்மையான இளைஞர்கள் திருடனுடன் சேர்ந்து வழிப்பறிக் கும்பலாகிறார்கள்.
நாலு போலீஸ் கூடியதில் நல்லா இருந்த ஊர் நாசமாகிறது. சுபம்!!!!! பாருங்கள் - அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம். சில சமயங்களில் உண்மைகள் கதைகளைவிட அதிசயமாக இருக்கும் என்பார்கள். உண்மை! உண்மை! உண்மை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக