திங்கள், 28 செப்டம்பர், 2015

தனி ஒருவன் தமிழ் சினிமா



தனி ஒருவன்
படத்தில் ஹீரோவும் தனி ஒருவன்; வில்லனும் தனி ஒருவன். என்னதான் டீம் ஒர்க் என்றாலும், எல்லாம் அடிவேர் தனி ஒரு மனிதன் .. அவன் சிந்தனை … அவன் அறிவு … அது ஆக்கம் என்றாலும் அழிவு என்றாலும். ஒன்றில் மனது வைத்துப் போராடத் துணிகிற மனிதனே அனைத்துக்கும் காரணமாகிறான் .. இதுதான் கருத்து.
கதையில் பேரறிவாளி வில்லன் சின்ன வயதில் இருந்தே குறுக்குப் பாதையும், குற்றம் பற்றிக் கவலைப்படாமல் தன் இலக்குகளை எட்டிக் கொண்டுபோய், மாபெரும் கார்ப்பொரேட் சாம்ராஜ்யத்தை முற்றிலும் பினாமிகளைக் கொண்டே இயக்குகிறான். தானும் தேச இளைஞர்களுக்கு முன்மாதிரியான விஞ்ஞானியாக வலம் வருகிறான். Douglas Adams வரிகள் நினைவுக்கு வருகின்றன. “Anyone who is capable of getting themselves made President should on no account be allowed to do the job.” ( Book: The Hitchhikers guide to the Galaxy. புத்தகத்தைப் படிக்காமல் யாரும் என்னிடம் சண்டைக்கு வர வேண்டாம்)
ஹீரோ, ஐ.பி.எஸ் பயிற்சி முதல் குற்றத்தை விட அதன் பின்னால் இருக்கிற காரண, காரியங்கள் ஆராயப் பட்டால்தான் உண்மைக் குற்றவாளி கண்டு களைய முடியும் என்று கிளம்புகிறான். இருவரின் மோதலில் வில்லனின் முடிவு கதை முடிவாகிறது.
‘பேராண்மை’ போல மாறுபட்ட கதைக் களம் ஜெயம் ரவிக்கு நல்ல வாய்ப்பு. நயன்தாரா பேருக்கு ஒரு கதாநாயகி வேண்டும் என்று மட்டும். அதனாலேயே ஒரே ஒரு டூயட். அரவிந்தசாமிக்கு இயல்பான ரோல். நடிக்கவே தேவையில்லை. தம்பி ராமையா அப்பாவுக்கு மகன் அரவிந்தசாமியின் மூன்று போதனைகளும் அதன் பலனும் … இருவரும் சேர்ந்து வந்த போதெல்லாம் அப்பாவின் ஒரே வார்த்தை ரொம்ப சீரியஸான கட்டத்தில் குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. நயன்தாராவின் காதல் வசனங்களும், தம்பி ராமையாவின் நகைச்சுவையும் .. அருமையான திரைக்கதை.
தனி ஒருவன் என்று வகைக்கு ஒன்றாக ஹீரோ, வில்லன் வந்தாலும், துணைப் பாத்திரங்கள், குறிப்பாக ஹீரோவின் நண்பர்கள் … அத்தனை பேரும் அருமையான நடிகர்கள்!
நான் இதைப் பார்த்த இடம் மதுரையில் பிரசித்தியான திரை அரங்கம். ஆகவே அங்கே தொழில் நுட்பக் கோளாறு இருக்கக் காரணமில்லை.ஆனாலும் சொல்லாமல் விட மனமில்லை. ஏனென்றால் நிறம் என்பது முக்கியமான் விஷயம். நயன் – ரவி, டார்ஜிலிங் பின்னணியில் நீல வானமும், பச்சை வனமும் இருக்கப் பேசுகிற காட்சியில், கொஞ்சுகிற கேமிரா, மற்றபடி படம் முழுக்க வேறு நிறம் காட்டி – ஒரே சாம்பல் அல்லது மங்கல் மஞ்சள் நிறம் – கடுப்படிக்கிறது. ரவி, அரவிந்தசாமியைப் பார்க்க லிஃப்ட் மேலே ஏறிப் பயனிக்கும் போதும், ஹாலிவுட் ஸ்டைலில் அரவிந்தசாமி அறிமுகம் ஆகும்போதும் அபாரமாக இருக்கிறது கேமிரா. ஆனால் அங்கேயும் நிறம் டொச்சுதான். அதீதம் அனைத்தையும் கெடுத்துவிடுகிறது.
கதையில் நிறைய குறைகள் இருந்தாலும், இப்படி ஒரு திரைக்கதை, நடிப்பு, கதைக்களம், தமிழ் சினிமாவில் வருவதே ஆச்சரியமான விஷயம். ஆனந்தமான விஷயமும் கூட. இறுதியில் எல்லாம் தனி மனிதன் நினைத்தால் முடியும் எழுந்திரு தமிழா என்று எழுப்பி விடுகிறார்கள்! படம் முடிஞ்சாச்சி போலாம் என்று இருக்கையை விட்டு எழுவதைத் தவிர இப்போதைக்கு தமிழன் வீறுகொண்டு எழுவதாயில்லை. இருந்தாலும், ‘புறம்போக்கு என்ற பொதுவுடமை’ படமும் இந்த தட்டி எழுப்பும் முயற்சிதான். ‘தனி ஒருவன்’ அந்த வரிசையில் நிற்கிறது. பார்க்கலாம் பலன் இருக்கிறதா என்று.
*****

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

மேதகு அப்துல் கலாமுக்கு அஞ்சலி!


இந்தியாவில் அறிவியல் அறிஞனும் ஒரு நாள் மக்கள் தலைவனாக முடியும் என்று நிரூபித்த விஞ்ஞானி!

அரசியலில், தாமரை இலைத் தண்ணீர் போல ஒட்டாமல் நின்று உயரம் தொட்ட ஞானி!

பிறந்த இடத்துக்கும், பேசிய மொழிக்கும், வளர்த்த விஞ்ஞானத்திற்கும் பெருமை சேர்த்த அபூர்வப் பிறவி!

ஆத்மா சாந்தியடையட்டும்! அவர் வாழ்க்கை இனிவரும் தலைமுறைக்கு வழிகாட்டி, எத்தனையோ பேருக்கு நம்பிக்கை ஒளியூட்டி, வாழ்வை வளம்பெற வைக்க வேண்டும்!

திங்கள், 13 ஜூலை, 2015

எனதாகிய நான் – ‘இசை’ திரைப்படம்



தமிழ் சினிமாவிற்கு விநோதமான தைரியம் வந்து விட்டது. தமிழ் சினிமாவைக் கேலி செய்து படம் எடுத்தார்கள். அது பெரிய விஷயமில்லை – பழைய தமிழ்ப் படங்களைக் கேலி செய்வது இன்னும் சின்னத்திரையில் வெற்றிகரமாக நடக்கிறது. கதைத் திருட்டு பற்றி ‘வெள்ளித் திரை’ எடுத்தார்கள். அடடே என்று நினைக்க வைத்தது. வெளியில் சொல்ல முடியாத இயலாத கலை வேதனைய மிக அழகாகக் கோர்த்து பாமரருக்கும் புரியும்படியாக அமைத்திருந்தார்கள். இப்போது ‘இசை’. திரை இசையின் அரசியலை, பார்ப்பவர் நெஞ்சை ஆழமாகக் கீறி உணர்ச்சியின் ஊற்றுக் கண்ணைத் திறந்து வைக்கிற அளவு வேகம், விளக்கம், இலை மறை காய் என்று இல்லாத பாத்திரக் குறியீடுகள் என்று … பார்க்கும் போது நெஞ்சு வலிக்கிறது.
இது ஒன்றும் புது விஷயமில்லை. எல்லாத் துறையிலும் அன்றாடம் நிகழ்வதுதான். ஆனால் வெளியில் சொல்ல முடியாத வேதனையான ஊமை வலி இது. அதனால் தான் பாதிக்கப் பட்டவரின் மனதில் கிடந்து உழன்று, ஊறி அந்த மனிதரின் மூளையைக் குழப்பிப் பைத்தியமாக அடித்து சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைத்துவிடும். எத்துனை திறமைசாலி பாவம் இப்படி ஆகிவிட்டாரே என்று ஆதங்கப் படும் வெளி மனிதர்களுக்கு அந்த வேதனை புரியாது, தெரியவும் தெரியாது.
ஒரு கலைஞனால் பல தலைமுறைகளைத் தன் இசையில் கட்டிவைக்க முடியும். ஆனால் ஒரு மனிதன் ஒரே கலைஞனின் இசையை மட்டுமே இரசிக்க வேண்டும் என்று யாரும் கட்டுப்படுத்த முடியாது.
தமிழ்மொழி இலக்கணம் படைத்தவர்கள் கூட இறுதியில், பழையன கழிதலும் புதியன் புகுதலும் தப்பில்லை ; அது காலத்தின் கட்டாயம் என்று சொல்லித்தான் முடிக்கிறார்கள்.
ஆனால் ‘எனதாகிய நான்’ என்று மனிதனின் கர்வம் தலைக்கேறும் போது, தன் வெற்றியில் தானே மயங்கி, தன்னில் மிஞ்சிய யாரும் இனி வரக்கூடாது என்று கிளம்பிவிடுவது … ‘வலியவன் பிழைப்பான்’ என்று மனித இனத்தின் இரத்தத்தில் ஊறிவருகிற பிறவி உந்துதல்.
நாம் இரசித்து, மதித்து வந்தவர்களிடம் இந்தக் குணம் இருந்தால் அது பெரும் அதிர்ச்சியாகவும் அருவருப்பாகவும் ஆகிவிடுகிறது.
இந்தப்படத்தில் இளைய இசை மேதை உருவாகியவுடன் மூத்த இசைமேதையிடம் தோன்றுகிற பொறாமை குறிப்பிட்ட யாரோ இருவர் கதை மட்டுமில்லை; காலம் காலமாக ஒரு வெற்றிகரமான கலைஞன் இடத்தை அடுத்த தலைமுறை அடைவது நாம் பார்த்து கேட்டு வருகிற சரித்திரம்தான். ஆனாலும் மூத்த மேதைகளுக்குப் புகழ் குறைவதில்லை. அவர்ளின் புகழ் பெற்ற பாடல்களை மக்கள் ஒர்துக்குவதில்லை. அரசல் புரசலாகச் சிறு வதந்தி போலப் பேசப்பட்டு மறைந்துவிடுகிற பூசல்களே நிகழும்.
ஆனால் இந்தப் படத்தில் பலமுறை வெளிப்படையாகவே இன்ன பாடல் என்று சொல்லிக் காட்டுவதும், உருவத்தில் ஒற்றுமை காட்டுவதும், ஆர்மோனியமும், பியானோவும் மோதுவதும் … இது இந்த இருவர்தான் என்று விளக்கமாகச் சொல்லி விடுகின்றன. இது வெறும் புகைதான். ஆனால் தன் பின்னால் பெரும் நெருப்பு கொண்ட புகை என்று தான் தோன்றுகிறது. கடைசியில் சூரியா இயக்குனராகிய தன் கனவு இது என்று சொல்லிக் கொள்ளும் போது விஷயம் உறுதிப் பட்டு விடுகிறது.
இந்த வேதனைப் பட்டிருந்தால் அதை அனுபவித்து எழுந்து நிற்கிற இளைய இசை மேதைக்குத் தலைவணக்கம்! This is not happening ONLY to you! There are your brothers and sisters everywhere in the world experiencing this all the time! Don’t give up the courage!
பிரச்சினைக்குரிய படம் என்றாலே சத்தியராஜ் இருக்க வேண்டும் போல. ஆனால் இந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்கு தைரியம் கொண்ட இப்படி ஒரு நடிகன் இருப்பது கலை உலகிற்கு நல்லதுதான்.
வியாபார நோக்கிலும் இது வெற்றிகாணக் கூடிய படம். சன் டிவி முந்திக் கொண்டாலும், சூடான கதை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி!
இந்த வலைப் பூவின் ஆதார மொழிபெயர்ப்புத் தொடர் ‘விசித்ரசித்தன்’ இதே போல வேறு துறையில் வேறு ஒரு இளம் மேதையின் போராட்.டம்தான் சொல்கிறது. அயன் ராண்ட் கதை ‘கட்டிடக் கலை வித்தகன் விசித்ரசித்தன்’ ஹோவர்ட் ரோர்க்-கிற்கு ஊரே எதிரி; எஸ்.ஜே.சசூர்யா படம் ‘இசைப் புயல்’ சிவாவிற்கு ஒரே எதிரி; இதுதான் வித்தியாசம்!

வெள்ளி, 19 ஜூன், 2015

யோகா - புதிதாக ஆரம்பிப்பவரகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை



இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மனத்தையும் உடலையும் அமைதியாக வைத்திருந்து ஆரோகியமாக வாழ ‘யோகா’ ஒரு இலகுவான உன்னத வழி. ‘யோகா’ என்பது ஒருவர் தன் மீது கவனம் செலுத்தித் தனக்குத் தானே புத்துயிர் கொடுத்துக் கொள்கிற வழியாகும். ஆனால் இதைக் கவனமாகச் செய்யாவிட்டலால் எதிர்மறை விளைவுகள் – நரம்புப் பிடிப்பு, மூட்டுவலி, மூச்சுத் திணறல் உட்பட பலவித ஆபத்துக்களைக் கொடுத்துவிடும். சில முக்கியமாகக் கவனித்துக் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இதோ:

1.        யோகா செய்ய நேரமும் காலமும் உண்டு. பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய காலை 4மணி முதல் 6மணி வரையிலும், மாலை அதேபோல் 4மணி முதல் 6மணி வரையிலும் மட்டுமே உடற்பயிற்சி சார்ந்த ஆசன வகை யோகாவைச் செய்ய வேண்டும்
2.        
2)      பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஆரம்பத்தில் சரியாக (காலை மடித்து உட்காரும் சுகாசனம்கூட ஓகே தான்) உட்கார்ந்து கண்களை மூடியபடி, சத்தம் இல்லாத, கூடியவரை தூய காற்று உள்ள இடமாகப் பார்த்து அங்கேபோய்ப் பயிற்சி செய்து பழக  வேண்டும். நன்றாகப் பழக்கம் வந்த பின் பஸ்ஸுக்குக் காத்திருக்கும் போது, பயணிக்கும் போது, ஏன் அலுவலக மீட்டிங்கில் அடுத்தவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டு சிந்தனையில் இருக்கும் போதுகூடச் செய்யலாம். நாம் செய்யும் மூச்சுப் பயிற்சி அடுத்தவர்களுக்குக் கூடத் தெரியாது. மனதும் நிதானப் பட்டு ஒருமுகப்படும். கவனம் கூர்ந்து நினைவாற்றல் பெருகும். பேச்சில் நிதானம் வரும்.
3.     
  3.   உடல் நலம் குறைந்த போது கட்டாயம் யோகா செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் மருந்து வேலை செய்யாது. பக்க விளைவுகளும் ஏற்படும்
4.        யோகாசனங்கள் செய்வது ஒரு ஒழுங்கு முறைகடைபிடித்தால் மட்டுமே பயன் தரும். 10 நாட்களில் எடை குறைக்கும் யோகா வகைகளை 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் திடீரென்று ஆரம்பிப்பது கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
5.        
         யோகா செய்யும் போது சம தரையில் இருந்து மட்டுமே செய்ய வேண்டும். சில யோகா வகுப்புளில் நடுவில் குழி உள்ள பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து ஆசனம் செய்ததால் நரம்பு பிடித்துக்  கொண்டு வருடக்கணக்கில் சிரமப் படுபவர்கள் உண்டு.
6.         
      யோகா கற்றுக் கொள்ளும் போது நீண்ட நாள் யோகா செய்து இன்னும் தினமும் செய்து கொண்டிருக்கும் ஆசிரியரிடம் மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு ஆசிரியரால் செய்ய முடிந்த ஆசனங்கள் மட்டுமே அவர் வழிகாட்டுதலில் செய்ய வேண்டும்
7.         
      10 வயதிற்குள் யோகா பழகஆரம்பிக்க வில்லை என்றால், அவர்கள் எல்லா ஆசனங்களையும் செய்யக் கூடாது. உடல் கூறு அனுமதிக்கிற சுலபமான ஆசனங்கள் சிலவற்றை மட்டும் கற்றுக் கொண்டு, அதை விடாமல் தினமும் செய்ய வேண்டும். 

       மூச்சுப் பயிற்சியும் தியானமும்:
தியானம் என்பது யோகத்தில் சேர்ந்த சுலபமான விஷயம். இதை எந்த வயதினரும், நோய்வாய்ப்பட்ட காலத்தில் கூட, செய்யலாம்.  மூச்சுப் பயிற்சியும் தியானமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இது பற்றி விரைவில் எழுதுகிறேன்.

திங்கள், 1 ஜூன், 2015

புறம் போக்கு என்கிற பொதுவுடமை


சரியான நடிகர் தேர்வு, உறுதியான கதைக்களம், ஊடாடிக் கிடக்கும் சமூகநிலை சார்ந்த குறியீடுகள் ... முக்கியமாக .. காதைத் துளைக்காத பின்னணி இசை ... எல்லாம் சேர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு புதிய கதைசொல்லும் உத்தியை, இரசிகர்கள் இரசிக்கும் படி வியாபாரத்தையும் விடாமல் வெற்றியாக்கியிருக்கிறார்கள்!

சுதந்திரப் போராட்ட நாயகி - குயிலி, அடிமைத்தனத்தில் வைத்திருந்த வெள்ளை - மெக்காலே, உயிரை எடுக்கிற - எமலிங்கம், தூக்கு மர நிழலில் நின்று அதைக் கதையாக எழுதிய தோழர் சி.ஏ. பாலன் நினைவாய் - பாலு என்கிற பாலுச்சாமி ... கதை மாந்தர் பெயர்களே கலக்கல் தான்.

தனக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு வாசிக்கப் படுகையில் அலட்டிக்கொள்ளாமல் கடலை உடைத்துச் சாப்பிடுகிற ஆர்யா, அட்டகாசமான சென்னைத் தமிழில் புலம்பிப் புலம்பி, தான் ஒரு உயிரை எடுத்தோம் என்று ஆகாமல் இருந்தால் எதையும் செய்யத் தயாராகும் விஜய் சேதுபதி, எல்லாம் பாலு தூக்கு முடித்தபின்னால்தான் என்று கடமையாய்த் திரியும் ஷ்யாம், மெல்லிய உடலோடு அலட்சியமாய் பைக்கில் உலா வரும் கார்த்திகா ... கதையில் தங்கள் பாகத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு செய்திருக்கிறார்கள்.
ஒரு இனம் அழிவைப் பார்த்துக்கொண்டு அதன் மறுபாதி அலட்டிக் கொள்ளாமல் இருக்கின்ற காலகட்டத்தில் மனித உரிமை என்றால் என்ன, நம் கண் முன்னாலேயே நாடு குப்பைக் கிடங்காக மாற்றப் படுவது, சிறைக்குள் இருக்கும் மனிதர்களும் காரணங்களும் என்று சிந்தனையை எழுப்பிவிட முயற்சி நடந்திருக்கிறது. சிலபல காரணங்களால் உரக்கவோ அன்றி உயர்த்தியோ குரலெடுக்க முடியாத ஊமை வலிகள் ... சரித்திரம் அறிந்தவரும் சிந்திக்கத் துணிந்தவரும்கூட எழுந்து வர வைக்க முடியாத பலவீனமான முயற்சி. ஆனால் ... சின்னதாக ஒரு உறுத்தல் உள்ளே உணரத்தான் முடிகிறது. அலை கடலின் கரை! ஓடி விளையாடி வீடு கட்டலாம். துணிந்தவன்தான் ஓடம் ஏறி உள்ளே பாய முடியும்!!!

நல்ல ஒரு குத்தாட்டம், எதிர்பாராத இடத்தில் எல்லாம் ஓரிரு வார்த்தைகளிலேயே குபீர் என்று சிரிப்பை வரவழைக்கிற வி.சேதுபதி, மிகமிக மெல்லியதானாலும் ஊடாடுகிற காதல், கண்ணுக்குக் குளிர்ச்சியாய் ஆர்யா, கார்த்திகா, பொருத்தமான வேடத்தில் ஷ்யாம் என்று மக்கள் பார்த்து மகிழ எல்லாமே இருக்குது, நல்லாவே இருக்குது. இன்னும் ஒரு முறை ... சலிக்காது!

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

ஜெயகாந்தன் - தமிழ் எழுத்தை ஞானபீடத்தில் அமர்த்திய அரசன்

ஜெயகாந்தன்! எங்களைக் காந்தமாக இழுத்த பெயர். இலகுவான எழுத்து நடையில் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை இந்த அளவு இலக்கியமாக்கிக் காட்ட இயலுவது சிலருக்குத்தான் சாத்தியம்.

மீனாக்ஷி புத்தக நிலையம் என்ற பெயரை நான் அறிந்ததே ஜெயகாந்தனைத் தேடித்தேடி வாங்கியதால்தான்.

சிறு கதைகளில் மன்னன்; குறு நாவல்கள் இந்த அளவு எத்தனை பேர் தமிழில் எழுதியிருக்கிறார்கள்? 'குரு பீடம்', 'ஊருக்கு நூறு பேர்', 'பிடி கருணை', 'ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும்' ... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். படிக்கப் படிக்க உயிர் தருகிற வரிகளை எழுதியவர் இவர்தானா என்று நேரில் கண்டபோது வியப்பு!

இன்னும் சென்னையில் 'நியூ செஞ்சுரி' (புறாக்கூடிபோன்ற சிறிய நிலையம்! வரலாறு கண்ட களம்) பக்கம் போனால் ஜெ.கே தான் நினைவில் நிறைகிறார்!

தன் கதைகளைத் தானே திரைப்படமாக்கி எழுத்தை ஓவியமாக்கும் வித்தையும் செய்தவர்.

தேடித்தேடி வாங்கி வீடு முழுக்க நிறைத்து வைத்திருக்கிற ஜெயகாந்தன் புத்தகங்கள் ... இன்று ஏக்கமாகப் பார்க்கின்றன. எழுத்தை ஆண்ட தலைவன் இனி எழுத்துக் களுக்குப் பொருளாக ஆகிவிட்டார்.

'இரும்புதான் எஃகாகிறது ஆனால் இரும்பைப்போல் அது உடைவதில்லை!'
'நதி பழைய நதி! புது வெள்ளம் போகிறது!'

பள்ளி வயதில் பசுமரத்தாணியாய்ப் பதிந்துவிட்ட ஜெ.கே வார்த்தைகள். என் இளவயது நட்குறிப்புகளை எடுத்துப் பார்த்தால் முதல் பக்கத்தில் பதிந்திருக்கும் இன்னும் எத்தனையோ வாக்கியங்கள்!

ஜெ.கே! காலம் கடந்த காலம்!