செவ்வாய், 29 ஏப்ரல், 2014

ஆறுபடை வீடு –6.திருத்தணி

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.



சென்னையில் இருந்து 2.30மணி நேரப் பயணத்தில் ஆந்திரா எல்லையில் உள்ளது திருத்தணிகை மலை. சிறு குன்று. சரிவாக இருப்பதால் வண்டிகள் ஏறிக் கோவில்வரை செல்லலாம்.
குறவர் குலத்தலைவருக்குக் குழந்தை இல்லாமல், வள்ளிக் கிழங்குச் செடியருகே கிடந்த குழந்தையை எடுத்து வள்ளி என்று பெயரிட்டு வளர்த்தார். முருகன் கிழவன் வேடமிட்டுப் போய் வம்பு செய்து அண்ணன் பிள்ளையார் யானை உருவில் வந்து உதவ, வள்ளியை மணம் புரிந்த இடம் திருத்தணிகை மலை. வள்ளி திருமணம் நாடகம் பிரசித்தம்.  வேடன், வேலன், விருத்தன்(முதியவன்) என்று மூன்று வேடங்களில் தோன்றிக் குற வள்ளியுடன் விளையாடிக் கோபப் படுத்தி, யானையை வரவழைத்துப் பயமுறுத்தி, முடிவில் பெரும் தர்க்கம் (debate) நடத்தி மணமாலை வாங்குவார் முருகன். டி.ஆர்.மகாலிங்கம்-யு.ஆர்.ஜீவரத்னம் வேடமிடும் வள்ளி திருமண நாடக நிகழ்ச்சிகள் அத்தனை பிரபல்யம். இன்றும் மழை வேண்டி வள்ளி திருமணம் நாடகம் நடத்தப் படுகிறது.
பாட்டி சொல்கிற சுவையான நிகழ்ச்சி ஒன்று: ஒரு தரம் எஸ்.எம்.குமரேசன் – தாராபாயா இல்லை யு.ஆர்.ஜீவரத்தினமா நினைவில்லை; வள்ளி வேடமிட்ட பெண்மணி வாதத்தில் தோற்க மறுத்து பேச்சுக்குப் பேச்சு பேசிக்கொண்டே போனாராம். கிழக்கு வெளுத்து விட்டது; விடிவதற்கு முன் நாடகம் சுபமாக முடியவேண்டும்; ஆகவே ஊர்ப் பெரியவர்கள் வள்ளியிடம் முறையிட்டு வாதில் தோற்றதாக ஏற்றுக் கொண்டு திருமண மாலையை வாங்கிக் கொள்ளச் சொல்லி வேண்ட, இறுதியில் அதுவும் மாலையைக் கழுத்தில் வாங்காமல், கையில் வாங்கிக் கொண்டு முடித்தாராம் அந்த நடிகை. அத்தனை திறமை வெளிப்படுத்த வாய்ப்பு உள்ள சுவாரசியமான நாடகக் கதை.
திருத்தணிக்கு நல்ல இரயில் வசதி உண்டு. சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்துகள் பலவும், திருத்தணி விலக்கு ரோட்டில் நிற்கும். ஆனால் இரயில் உகந்தது. பயண நேரமும் குறைவு, இரயில் நிலையமும் வசதியாக உள்ளது. பேருந்து நிலையத்தை அப்படிச் சொல்ல முடியாது. இத்தனை ஆட்கள் வந்து போகும் ஊருக்கு இத்தனூண்டு பேருந்து நிலையம். விலக இடமில்லை. மலையடிவாரத்தில் இருந்து கோவில் நிர்வாகம் இயக்குகிற பேருந்துகள் உண்டு. ஆட்டோ உண்டு. ஆனால் மாதக் கிருத்திகை போன்ற வழக்கமான நல்ல நாட்களுக்கெல்லாம் கூட்டம் அலை மோதும். மற்ற நாட்களில் இதுதானா அந்தக் கோவில் என்று வியக்கும் அளவு வெறிச்சோடிக் கிடக்கும். 

கோவில் சின்னது. கருவறையைச் சுற்றி இருக்கிற ஒரு மண்டபம் தவிர ஒதுங்க நிழல் கிடையாது. வரிசையில் நின்றால் வேதனைதான். சிறுவர்களும் மூத்த குடிமக்களும் அண்ட முடியாது. அதீத வருமானம் உள்ள கோவிலில் ஏன் பக்தர்களுக்கு வரிசையில் நிற்கக் கூட கூறையில்லை ? இத்தனைக்கும் சிறப்பு தரிசனத்திற்கு வேறு 200 முதல் 500 ரூபாய் வரை வாங்குகிறார்கள். அத்தனை பணமும் எங்கே போகிறதோ? நிர்வாகம் பழனியைப் போல இங்கும் மோசம்தான்.

முருகன் சிறு உருவமாகச் சேவல் கொடியும் மயிலும் கொண்டு அழகனாக நிற்கிறான். சாதாரண நாளில், வெயில் குறைந்த நேரத்தில் சென்றால் அருமையான தரிசனம் நிச்சயம்.
 
(ஆறுபடைவீடு தொடர் நிறைவு)

திங்கள், 21 ஏப்ரல், 2014

ஆறு படைவீடு – 5.பழனி



Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation.

note: This is translation of Ayn Rands book The Fountain head. The book is in public domain and this Tamil translation is copyright to the author of this blog.
                    
                    ஆறு படைவீடு – 5.பழனி

மதுரையில் இருந்து மேற்கே கேரள எல்லையை ஒட்டி இருக்கிறது பழனி மலையை உள்ளடக்கிய மேற்கு மலைத் தொடர். 

பழனி முருகன் கதையை ஊடுக்கே பெரிய அளவில் அறிமுகப்படுத்திய பெருமை திருவிளையாடல் திரைப் படத்திற்கு உண்டு. கலகப் பிரியரான நாரத முனி, அபூர்வமான மாம்பழம் ஒன்றைக் கொண்டுவந்து சிவனிடம் கொடுக்க, சிவன் அதை மனைவியிடம் கொடுத்தார்.மனைவியோ, பிள்ளைகளிடம் கொடுக்கலாம் என்று சொல்ல, கலகம் பிறந்தது. பழத்தைப் பிரிக்காமல் சாப்பிட்டால்தான் பலன் என்று நாரதர் உறுதியாகச் சொல்லி விட்டார். அதனால், பிள்ளைகளுக்குள் எனக்குத்தான் உனக்குத்தான் என்று சண்டை. இருவரும் விட்டுக் கொடுக்காமல் போராடினார்கள். ஆகவே சிவன் போட்டிவைத்தார். இருவரில் யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே பழம்! முருகனுக்குக் கொண்டாட்டம். வேகமாகப் பறக்கிற மயில் வாகனத்தின் முன், அண்ணன் கணபதியின் எலி வாகனம் தோற்றுவிடும் என்ற எண்ணத்தில் பூமியைச் சுற்றப் புறப்பட்டார். ஆனால், பிள்ளையாருக்குத் தன் வாகனத்தின் மகிமை தெரிந்ததால், வேறு வழி யோசித்தார். பேசாமல் அம்மாவையும் அப்பாவையும் எதற்கும் இருக்கட்டுமென்று மூன்று முறை சுற்றி வந்து விட்டு, எனக்கு உலகமே அம்மா-அப்பாதான்; ஆகவே இப்போது உலகம் சுற்றிவந்து விட்டேன்; போட்டியில் வெற்றி எனக்கு என்று சொல்லி,. அம்மாவின் கைப் பழத்தை உரிமையுடன் எடுத்துக்கொண்டார். பூமியைச் சுற்றிவந்த முருகன் பார்த்தால் … ஒரே கோபம். பெரியவர்கள் எல்லாம் சேர்த்து ஏமார்றி விட்டீர்களே என்று கோபித்துக் கொண்டு உங்கள் சொத்து, சுகம், சாவகாசமே வேண்டாம் என்று கோவணம் மட்டும் உடுத்தி, ஆண்டிக்கோலத்தில் போய் நின்று கொண்ட தலமே ‘பழநி’. 

அநேகமாக இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் போட்டிகளில் விதிமுறைகள் புகுத்தும் வழக்கம் தோன்றி, இன்று மூன்றாவது, நாலாவது அம்ப்பையர் போட்டுத் தீர்மானிக்கும் வரை வந்துள்ளது. ஆனால் இன்னும் அலுவலகங்களில் இப்படி உலகம் சுற்றித் தோற்றுப் போகிறவர்களுக்கும் போட்டிக்குப் புது அர்த்தம் கற்பித்து, நான் தான் ஜெயித்தேன் என்று வெற்றி மாலை சூடிக் கொள்பவர்களுக்கும் பஞ்சமில்லை.

பழனி மலை, சுமார் 600+ படிகள் ஏறிப் போனால்தான் தரிசனம். ஆறு படைவீடுகளிலும் பழனியே சற்று ஏறிச் செல்லக் கடினமான இடம். ஆனால் ரொம்பகாலம் முன்பே ‘யானைப் பாதை’ என்று படியில்லாமல் சரிவில் (Ramp) ஏறிப் போக வழி உண்டு, இது சற்று இலகு. ஆனாலும் கடைசியில் 100 படி ஏறித்தான் ஆக வேண்டும். போன நூற்றாண்டில் இழுவை இரயில் போட்டார்கள். இப்போது கயிற்றில் ஓடும் பெட்டியும் இருக்கிறது, ஆனாலும் இவை போதாது. சாதாரண காலங்களில்கூட பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தமிழகம் தவிர கேரளத்து பக்தர் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

தமிழகத்தில் அதிகம் வருமானம் வருகிற கோவில் பழனி. ஆனால் மோசமான நிர்வாகத்தால், பக்தர்களுக்கு சரியான வசதிகள், தங்கும் இடங்கள், ஏதும் கிடையாது. இரயிலுக்கும், கயிற்றுப் பெட்டிக்கும் காத்துக்கிடக்கிற கூட்டத்தில், ஆலய நிர்வாகிகள், அலுவலர்கள் அவரவர் வேண்டிய ஆட்களைக் கொண்டுவந்து இடைச் சொருகுவது அநியாயம். வயதான, மலை ஏற இயலாத பக்தர்களுக்கு ஏற்பட்ட இந்த வழிகளைத் தவறாகப் பயன் படுத்துகிறார்கள். வரிசையில் நிற்பவர்களுக்கு மட்டும் புண்யத்திற்கு நிழல் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆலய நிர்வாகம் நிறைய சீர் குலைந்து கிடக்கிறது.
தரிசனம்: இத்தனை கஷ்டப்பட்டு ஏறிப் போனால், அழகான மலை உச்சி, அடக்கமான கோவில். சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சுகிறது. வரிசையில் நின்று பொறுமை காத்தால் நன்றாகத் தரிசிக்கலாம். ரொம்ப இருள் காட்டாத கருவறை. முருகனை நன்றாகவே தரிசிக்கலாம். 

போகர் என்ற சித்தர், நவபாஷாணம் (ஒன்பது மூலிகைகள்) கலந்து தயாரித்ததாகச் சொல்லப்படுகிற மூல விக்கிரகம். வலதுகை மடித்து இடுப்பில் இருக்க, இடதுகையில் கோல் ஊன்றி நிற்கும் ஆண்டிச் சிறுபிள்ளை! ஆனால் விக்கிரகத்தின் மருத்துவ சக்தியை அறிந்து, காசு வாங்கிக் கொண்டு சிறிது சிறிதாகச் சுரண்டி விற்கிறார்கள்; முருகனின் கைக்கும் இடுப்பிற்கும் இடையே இடைவெளி வரும் வரை சுரண்டப்பட்டு விட்டது என்று பக்தர்கள் குற்றம் சாட்டியதும், சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்து மூலவர் அபிஷேகம் நிறுத்தப் பட்டு விட்டது. 

முருகன் ஆண்டிக் கோலத்தில் இருப்பது யாருக்கு அதிருஷ்ட்டமில்லை என்று நினைத்தார்களோ தெரியவில்லை, எப்போதும் இராஜாலங்காரத்தில் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் பழனிக்குப் போவது அவனை ஆண்டிக் கோலத்தில் தரிசிக்கத்தான். அதைக்கூட அழித்து விட்ட நிர்வாகம்!

தரிசனம் முடிந்து வெளியே வந்ததும் சமீப காலமாக கோவில் வளாகத்திலேயே பஞ்சாமிர்தக் கடை! வாசலிலேயே மடக்கி வியாபாரம்! இதுவும் கோவில் நிவாகச் சீர்கேட்டின் இன்னொரு அடையாளம்,

பழனியின் பிரசாதம் பஞ்சாமிர்தம், பழங்களைக் கூட்டித் தயாரிக்கப்படுகிற இனிப்பான, உடல் நலத்திற்கு உகந்த பிரசாதம். மலையடிவாரத்தில் நிறையக் கடைகள் உண்டு. வேண்டிய மட்டும் வாங்கிக் கொள்ளலாம். நீண்ட காலம் கெட்டுப் போகவும் செய்யாது.
பழனியில் தைப்பூசம் விஷேசம், தமிழ் நாடு முழுவதிலும் இருந்து பாத யாத்திரை பக்தர்கள் கோஷ்டி கோஷ்டியாக வருகிறார்கள். இரவில் சாலையிலோ, இரயிலிலோ அந்த வழியில் பயணிக்கும் போது சாரி சாரியாக பக்தர் கூட்டம் நடந்து போவதைப் பார்க்கலாம்.
மொத்தத்தில், நாம் மதுரையில் இருந்து அதிகாலை புறப்பட்டுப் போய் யானைப் பாதையில் மலைஏறி, தரிசனம் செய்து திரும்புவதே உத்தமம், நிர்வாகத்தை நம்பி எந்த வசதியும் எதிர்பார்க்க முடியாது.

புதன், 16 ஏப்ரல், 2014

ஆறுபடை வீடு –4.திருச்செந்தூர்

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation.

note: This is translation of Ayn Rands book The Fountain head. The book is in public domain and this Tamil translation is copyright to the author of this blog.



ஆறுபடை வீடு –4.திருச்செந்தூர்


வங்காள விரிகுடாக் கரையில் கன்யாகுமரிக்கும் தூத்துக்குடிக்கும் இடையே அமைந்த நகரம். முருகன் தேவர் படைத் தலைமை ஏற்று சூரனை வதத்த இடம்.

பௌர்ணமியில் முழு நிலவு கடலில் இருந்து கிளம்புவதைக் காணுவது ஆனந்தம்! நீண்ட கடற்கரையில் பெரிய கோயில். பிரகாரம் சுற்றி வந்து ஆறு முகங்களுடன் கூடிய முருகனைத் தரிசிக்கலாம். ஆண்டு தோறும் பக்தர்கள் வருகை அதிகம் என்றாலும் தீபாவளிக்கு மறுநாள் பிரதமை தொடங்கி ஆறு நாட்கள் – முருகன் சூரசேனையுடன் யுத்தம் புரிந்த ஆறு நாட்கள் – பக்தர்கள் செந்தூரிலேயே தங்கி கந்த சஷ்டி விரதம் இருப்பார்கள். தினம் கடல் நீராடல். தேவஸ்தானம் பக்தர்களிடம் நன்கொடை வாங்கிக் கட்டி விட்டிருக்கிற தங்குமிடங்கள் அத்தனையும் நிறைந்து வழியும். கடலோர மணலிலேயே தங்கி விடுபவர்களும் உண்டு. ஆறாம்நாள் சூரசம்ஹாரப் பெருவிழா! மாலை மயங்கும் நேரத்தில் முருகன் கடற்கரையில் இறங்கி … இப்போது எல்லாத் தொலைக்காட்சியிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாகிறது. பார்த்தே ஆனந்திக்கலாம்.

கடற்கரையில் நாழிக்கிணறு நீராடல் ஒரு முறையாவது செய்ய வேண்டும். அதிருஷ்டம் இருந்தால் கூட்டம் இல்லாத நாளில் படிகள் இறங்கிக் கிணற்றுக்குள் போய், அங்கே நாழி (நெல் அளக்கும் படி அளவு உள்ளதால் அந்தப் பெயர்) அளவில் இருக்கிற வட்டத்தில் பொங்குகிற நீரை மொண்டு குளிக்கலாம். பிறகு கடல் நீராடலாம். சில நாட்களில் கூட்டம் அதிகம் இருந்தால் பொறுமையும் நேரமும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
கடலோரம் கோவில் பிரகாரம் அருகிலேயே கற்கள் நிறைந்து குன்று என்று சொல்ல முடியாது ஆனால் பெருங்கல் குவியல். அங்கே ‘வள்ளிக் குகை’ என்று கேட்டால் சொல் வார்கள். அதற்குள் நுழைந்து, குறுகிய பாதையில் போய் வள்ளி ஒளிந்து விளையாடிய இடம் பார்க்கலாம். வள்ளி சிலைக்கு ஆராதனையும் நடக்கிறது.

செந்தூர் பனை மரம் நிறைந்த காடு. பனை வெல்லம் – அதிலும் சில்லுக் கருப்பட்டி – மிக ஆரோக்கியமும் சுவையும் மணமும் நிறைந்த பிரசாதம். அதோடு, தினை மாவும் கிடைக்கும். 

செந்தூர் தொடர்பில் வழங்குகிற செவிவழிக்கதைகளில் சுவாரசியமான ஒன்று. வீர பாண்டிய கட்டபொம்மன், தினமும் செந்தூர் முருகனுக்கு உணவு படைக்கப் பட்டபின்புதான் தான் உணவு உண்பது வழக்கமாம். அந்த நேரத்தை அறியும் பொருட்டு செந்தூரில் இருந்து தன் இருப்பிடமான பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைவரை மணிக் கூண்டுகள் அமைத்தார். செந்தூரில் தொடங்கி மணிக்கூண்டுகள் அடுத்தடுத்து சத்தம் காதில் வாங்கியதும் தான் ஒலித்து அடுத்த கூண்டிற்குச் செய்தி அனுப்ப பாஞ்சாலங்குறிச்சியின் கடைசி மணி ஒலி கேட்டதும் சாப்பிடப் போவாராம் கட்டபொம்மு என்கிறது செவிவழிச் செய்தி.

மதுரையில் இருந்து நிறையப் பேருந்து – சாதாரண நாளிலேயே பத்து நிமிடத்துக்கு ஒருமுறை; விஷேஷகாலத்தில் இன்னும் அதிகம்  – இருக்கிறது. குறைந்த பட்சம் மூன்று மணிநேரப் பயணம். இரயில் கொஞ்சம் குறைவுதான். ஆனால் முன் பதிவு செய்து வருவதானால் வரலாம். இங்கிருந்து கன்யாகுமரி அருகில் என்பதால் சேர்த்தே பார்த்து வரத் திட்டமிட்டுக் கொள்ளலாம். 

சாவாதானமாகத் தீர்த்த யாத்திரை செய்பவர்கள் என்றால், அருகில் நவ திருப்பதி எனப்படும் 9 பெருமாள் தலங்கள் 40 கி.மீ சுற்றுக்குள் இருக்கிறது. தாமிரபரணிக் கரையின் இருபுறமும் அடுத்தடுத்து இருக்கும் இத் தலங்களைப் பார்க்க ஒரு நாளாவது தங்க வேண்டும். 

அருகிலேயே திருநெல்வேலி; நெல்லையப்பர்-காந்திமதி தரிசனம். கன்யாகுமரி மாவட்டத்தில் இன்னும் நிறையக் கோவில்கள் உள்ளன.