திங்கள், 1 ஜூன், 2015

புறம் போக்கு என்கிற பொதுவுடமை


சரியான நடிகர் தேர்வு, உறுதியான கதைக்களம், ஊடாடிக் கிடக்கும் சமூகநிலை சார்ந்த குறியீடுகள் ... முக்கியமாக .. காதைத் துளைக்காத பின்னணி இசை ... எல்லாம் சேர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு புதிய கதைசொல்லும் உத்தியை, இரசிகர்கள் இரசிக்கும் படி வியாபாரத்தையும் விடாமல் வெற்றியாக்கியிருக்கிறார்கள்!

சுதந்திரப் போராட்ட நாயகி - குயிலி, அடிமைத்தனத்தில் வைத்திருந்த வெள்ளை - மெக்காலே, உயிரை எடுக்கிற - எமலிங்கம், தூக்கு மர நிழலில் நின்று அதைக் கதையாக எழுதிய தோழர் சி.ஏ. பாலன் நினைவாய் - பாலு என்கிற பாலுச்சாமி ... கதை மாந்தர் பெயர்களே கலக்கல் தான்.

தனக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு வாசிக்கப் படுகையில் அலட்டிக்கொள்ளாமல் கடலை உடைத்துச் சாப்பிடுகிற ஆர்யா, அட்டகாசமான சென்னைத் தமிழில் புலம்பிப் புலம்பி, தான் ஒரு உயிரை எடுத்தோம் என்று ஆகாமல் இருந்தால் எதையும் செய்யத் தயாராகும் விஜய் சேதுபதி, எல்லாம் பாலு தூக்கு முடித்தபின்னால்தான் என்று கடமையாய்த் திரியும் ஷ்யாம், மெல்லிய உடலோடு அலட்சியமாய் பைக்கில் உலா வரும் கார்த்திகா ... கதையில் தங்கள் பாகத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு செய்திருக்கிறார்கள்.
ஒரு இனம் அழிவைப் பார்த்துக்கொண்டு அதன் மறுபாதி அலட்டிக் கொள்ளாமல் இருக்கின்ற காலகட்டத்தில் மனித உரிமை என்றால் என்ன, நம் கண் முன்னாலேயே நாடு குப்பைக் கிடங்காக மாற்றப் படுவது, சிறைக்குள் இருக்கும் மனிதர்களும் காரணங்களும் என்று சிந்தனையை எழுப்பிவிட முயற்சி நடந்திருக்கிறது. சிலபல காரணங்களால் உரக்கவோ அன்றி உயர்த்தியோ குரலெடுக்க முடியாத ஊமை வலிகள் ... சரித்திரம் அறிந்தவரும் சிந்திக்கத் துணிந்தவரும்கூட எழுந்து வர வைக்க முடியாத பலவீனமான முயற்சி. ஆனால் ... சின்னதாக ஒரு உறுத்தல் உள்ளே உணரத்தான் முடிகிறது. அலை கடலின் கரை! ஓடி விளையாடி வீடு கட்டலாம். துணிந்தவன்தான் ஓடம் ஏறி உள்ளே பாய முடியும்!!!

நல்ல ஒரு குத்தாட்டம், எதிர்பாராத இடத்தில் எல்லாம் ஓரிரு வார்த்தைகளிலேயே குபீர் என்று சிரிப்பை வரவழைக்கிற வி.சேதுபதி, மிகமிக மெல்லியதானாலும் ஊடாடுகிற காதல், கண்ணுக்குக் குளிர்ச்சியாய் ஆர்யா, கார்த்திகா, பொருத்தமான வேடத்தில் ஷ்யாம் என்று மக்கள் பார்த்து மகிழ எல்லாமே இருக்குது, நல்லாவே இருக்குது. இன்னும் ஒரு முறை ... சலிக்காது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக